நளினி மற்றும் முருகனை கட்செவி காணொலி வசதி மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்னை: உயர்நீதிமன்றம் கேள்வி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி மற்றும் முருகனை கட்செவியில் உள்ள காணொலி வசதி மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பி ரச்னைஉள்ளது
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி மற்றும் முருகனை கட்செவியில் உள்ள காணொலி வசதி மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பி ரச்னைஉள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு எனது மகள் நளினியும், மருமகன் முருகனும் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். வேலூர் சிறையில் இருவரும் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் முருகனின் தந்தை இலங்கையில் காலமானார்.
இறந்த தனது தந்தையின் உடலை காணொலி காட்சி மூலம் காண அனுமதி வழங்க கோரிய முருகனின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது. எனவேவ இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், லண்டனில் உள்ள அவரது மூத்த சகோதரியிடமும் தினமும் 10 நிமிடங்கள் கட்செவியில் உள்ள காணொலி வசதி மூலம் பேச அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் காணொலி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் இதுதொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நளினி மற்றும் முருகனை கட்செவியில் உள்ள காணொலி வசதி மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்னை உள்ளது என கேள்வி எழுப்பி, அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.