திருவாரூரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிப் பேருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை: மாவட்டத் தலைவர்
திருவாரூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள பாதிப்பேருக்கு இதுவரை கரோனா நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கட்டடத் தொழிலாளர்கள்
திருவாரூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள பாதிப்பேருக்கு இதுவரை கரோனா நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க திருவாரூர் மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியது..
கரோனா தொற்று நோய் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால், இரண்டு மாத காலமாக கட்டடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வேலைக்குப் போக முடியாததால் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். கடந்த 3 ம் தேதிக்குப் பிறகு, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கட்டடம் மற்றும் அமைப்புச் சாராத் தொழிலாளர்கள் வேலையைத் தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
ஆனால், கட்டட வேலைக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலையேற்றம், பொருட்களின் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணத்தால் வேலை வாய்ப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்று நோய் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.கரோன ஊரடங்கிற்காக, அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் பாதிப் பேருக்கு மேல் கிடைக்கப்படவில்லை. தொழிலாளர்கள் நல அலுவலகத்திற்கு தொழிலாளர்களும் ஊரடங்கு என்பதால் நேரடியாகச் சென்றும் பார்க்க முடியவில்லை. தமிழக அரசு பல இக்கட்டான சூழ் நிலையிலும் அத்தியாவசியத் தேவைகளை செயல்படுத்தி செய்து வருகிறது.
அது போல, அரசு கட்டடம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு, விடுப்பட்ட 2000 க்கும் மேற்பட்ட கட்டடம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கப்பட வேண்டும். மேலும், கட்டடம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று நோயின் பாதுகாப்பு கருதி, தொழிலாளர்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும் என மாவட்டத் தலைவர் தெரிவித்துள்ளார்.