நியாயவிலைக் கடையில் உணவுப் பொருள்கள் தடையின்றி கிடைக்கிறது: அமைச்சர் காமராஜ்
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தடையின்றி கிடைக்கிறது என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தடையின்றி கிடைக்கிறது என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழக அரசின் நடவடிக்கைகளால் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வல்லுநர் குழுக்களை அமைத்து தினந்தோறும் ஆலோசனை நடத்தி, அவர்களது வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 845 பகுதிகளில் உள்ள 2.93 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கூடுதலாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்துக்கான உணவுப் பொருள்கள் 98% மக்களுக்கு வழங்கப்பட்டுளள்து.
ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் மூலம் அரசியல் நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின். அரசியல் ஆதாயத்துக்காக உண்மையில்லாத பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.