காவல்துறை சார்பில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கரோனா கால திறமை போட்டி
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் காவல்துறை சார்பில் கரோனா ஊரடங்கில் வீட்டில் தனிமையில் இருக்கும் மாணவர்களுக்கான திறமையை வெளிப்படுத்தும் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் காவல்துறை சார்பில் கரோனா ஊரடங்கில் வீட்டில் தனிமையில் இருக்கும் மாணவர்களுக்கான திறமையை வெளிப்படுத்தும் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரங்கிப்பேட்டை பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதியில் கரோனா தொற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தனிமையில் வீட்டில் அடைந்து கிடக்கும் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்குவதற்கும், திறமையை வெளிப்படுத்தும் வகையில் பரங்கிப்பேட்டை காவல் நிலையம் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுக்கள் இணைந்து உங்கள் திறமையை எங்களிடம் காட்டுங்கள் (Show Your Talent) என்ற போட்டி வாட்ஸ் ஆப் மூலம் நடத்தப்பட்டது.
இப்போட்டியில் பங்குபெற்ற குழந்தைகள் ஓவியம் , நடனம் , பாட்டு , கதை, விளையாட்டு , கவிதை போன்றவற்றின் மூலம் திறமைகளை வீட்டில் செய்து காட்டி வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைத்தனர். போட்டியில் பங்கு பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Advertisement
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி பதக்கம், சான்று, மரக்கன்று ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி ஆய்வாளர்கள் பொன்மகரம், ஆனந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.