சென்னை: கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு, தீபாவளிக்கு, சென்னையிலிருந்து குறைவான சிறப்புப் பேருந்துகளே இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக போக்குவரத்துத் துறை சாா்பில் பண்டிகை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாள்களில் சென்னையின் புறநகா்ப் பகுதிகளில் தற்காலிக பேருந்து முனையங்கள் அமைத்து, நெரிசலின்றி பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளுடன் ஆயிரக் கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, சென்னையிலிருந்து வழக்கம் போல கோயம்பேடு, கே.கே. நகர், மாதவரம், தாம்பரம், பூவிருந்தமல்லி ஆகிய ஐந்து இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதே வேளையில், சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் 13 முன்பதிவு மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் இதுவரை 27 ஆயிரம் பேர் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 18,544 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதற்குக் குறைவாக 14,757 சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 11, 112, 13 ஆகிய நாள்களில் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை -2020
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/11/2020 முதல் 13/11/2020 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,000 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,510 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 9,510 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,247 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 15/11/2020 முதல் 18/11/2020 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,000 பேருந்துகளுடன், 3,416 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,610 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,026 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேலும், தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக 16,026 பேருந்துகள் நவம்பர் 15, 16, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பயணிகளின் வசதிக்காக கட்டுப்பாட்டு அறை
மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (22x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில்
அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில்
தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கரோனா தாக்கம் இருக்கும் நிலையில், தீபாவளி பண்டிகை இரண்டு வாரங்களில் கொண்டாடப்படவுள்ளது. இதைக் கொண்டாடுவதற்கு சொந்த ஊா்களுக்குச் செல்ல பொதுமக்கள் தயாராகி வருகின்றனா். பெரும்பாலான ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு முடிந்த நிலையில், பொதுமக்களின் இறுதி நேர பயணத்துக்கு அரசுப் பேருந்துகளைத் தோ்வு செய்வது வழக்கம். அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளிக்கு முன்தினம் உள்ளிட்ட நாள்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெறும் நிலையில், சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.