வாழக்கோம்பையில் அதிகரிக்கும் மயில்கள்; வீணாகும் முட்டைகள்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரப்பகுதிகளான சேரடி, பிள்ளையார்மதி, வாழக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மயில்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட தற்போது அதிகரித்து வருகிறது.
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரப்பகுதிகளான சேரடி, பிள்ளையார்மதி, வாழக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மயில்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட தற்போது அதிகரித்து வருகிறது.
கொல்லிமலை அடிவாரப்பகுதிகளான வாழக்கோம்பை, தம்மம்பட்டிகாட்டுக்கொட்டாய்கள், புலிகரடு பகுதி, சேரடி, பிள்ளையார்மதி உள்ளிட்ட மலை சார்ந்த குளுமையான பகுதிகளில் வழக்கமாக தேசியப்பறவையான மயில்களின் ஆதிக்கம் மிகவும் அதிகளவில் காணப்படும்.
கடந்த சில மாதங்களாக அதன் எண்ணிக்கையும், அப்பகுதிகளுக்கு வரும் மயில்களின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருந்து வருகிறது.தம்மம்பட்டியிலிருந்து செல்லும் சாலையில் மயில்கள் குறுக்கே செல்வது, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இப்பகுதிகளில் விளையும் தானியங்களை கொத்தி சாப்பிட்டுச்செல்லும் மயில்கள், அடர்ந்த காட்டுப்பகுதிகளில், வயல்களில் மயில்கள் முட்டைகளை அப்படியே இட்டுவிட்டுச்சென்றுவிடுகின்றன.
அவைகள் அப்படியே கிடந்து வீணாகிப்போகின்றன. எனவே, இப்பகுதிகளில் மயில்களின் உற்பத்தியைப்பெருக்கும் நோக்கிலும், முட்டைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் தம்மம்பட்டி வனச்சரகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.