பனையூரில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
விருதுநகர் மாவட்டம் திருக்கழி வட்டம் நரிக்குடி அருகே பனையூர் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருக்கழி வட்டம் நரிக்குடி அருகே பனையூர் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமிற்கு நரிக்குடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமை வகித்தார். அப்போது நரிக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் பிள்ளையார் நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் குமரேஸ்வரி பழனி ஆகியோர் குத்து விளக்கேற்றி முகாமினைத் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், பொது மருத்துவம், சித்த மருத்துவம், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஸ்கேன் பரிசோதனை, தாய்மார்களுக்கான கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், இந்நிகழ்ச்சசியின்போது இரத்த தான முகாமும் நடைபெற்றது. இதில் நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்பட பணியாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் சுமார் 800 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மல்லிகா, ஊராட்சி செயலர் வெங்கட்ராமன் உள்பட பலர் இம்முகாமில் கலந்து கொண்டனர்.