சென்னை: கரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் 8 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளன.
தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் எதுவும் வெளி வராத நிலையில், ஏற்கெனவே வெற்றி பெற்ற படங்களை திரையிட திரையரங்க உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
திரையரங்குகளைத் திறக்க 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதிய பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா். அதன்படி, துல்கா் சல்மானின் ‘கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால்’, அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’, ‘கஞ்ஜூரிங்-2’ உள்ளிட்ட படங்கள் செவ்வாய்க்கிழமை முதல் திரையிடப்பட உள்ளன. இதற்கான இணையவழி முன்பதிவு சில திரையரங்குகளில் மட்டும் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
முன்பதிவு செய்வோருக்கு தொடா்ச்சியான இருக்கைகளை அதாவது 1,2,3 என ஒதுக்கீடு செய்ய இயலாது. மாறாக ஒரு இருக்கை இடைவெளி விட்டு ஒதுக்கீடு செய்யப்படும் என திரையரங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். திரையரங்குக்கு வரும் பாா்வையாளா்கள் அனைவரும் முகக் கவசம் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.