விழுப்புரம் டி.ஐ.ஜி அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றித் தீவைத்துக் கொண்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவர்(டி.ஐ.ஜி) அலுவலகம் இயங்கிவருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை 10 மணி அளவில் இந்த அலுவலகத்துக்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.
இதனைக் கண்டு அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி அந்த இளைஞரைக் காப்பாற்றினர். இருப்பினும், அவருக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக 108 அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர் சிதம்பரம் அருகே மேல்மனக்குடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் திருலோகசந்தர்(35) என்பதும் தெரியவந்தது. அவர், கையில் எந்தவித புகார் மனுவும் கொண்டு வரவில்லை என்றும் தீக்குளித்த போது தனது வீட்டுக்குச் சிலர் சூனியம் வைப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாராம்.
ஆகையால், இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது அவர் 20 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.