மதுரை: அரசியல் ரீதியாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி தெரிவித்தார்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார். அவரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, அழகிரி புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகவும், வேறு கட்சியில் இணைய உள்ளதாகவும் அவ்வப்போது அவரது ஆதரவாளர்களால் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றை அழகிரி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கருணாநிதி பெயரில் கட்சி தொடங்குவது குறித்து கருத்துக் கேட்க ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டப் போவதாகவும், பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து அழகிரியைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் கூறியது:
நான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது கரோனா தொற்று காலமாக இருப்பதால் ஆதரவாளர்களைச் சந்திக்கும் முடிவிலும் இல்லை. எந்த முடிவை எடுத்தாலும் உங்கள் (ஊடகங்கள்) அனைவரையும் அழைத்து தெரிவிப்பேன் என்றார்.