மணப்பாறை அருகே முறையான குடிநீர் விநியோகம் அளிக்காத நகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி, பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் முறையாக நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை எனவும், மேலும் விநியோகம் செய்யும் குடிநீரும் குறைந்த அளவு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பலமுறை இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று காலை மணப்பாறை - திருச்சி சாலை பொத்த மேட்டுப்பட்டியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழி சாலை போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறை ஆய்வாளர் அன்பழகன், நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீர்செய்து தருவதாக உறுதி கூறினர், அதனைத்தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் திருச்சி மார்க்க போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.