செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் தாக்கத்தால் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடியை எட்டியதால் நேற்று (புதன்கிழமை) நண்பகல் முதல் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று நீரின் வரத்துக்கேற்ப திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முழுமையாக நிவர் புயல் கரையைக் கடந்ததால் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு 500 கனஅடியாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது அது 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 கனஅடியிலிருந்து 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.