பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதியதில் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அடுத்த ஓசைப்பட்டியை சேர்ந்தவர் முனியப்ப கவுண்டர் மகன் குருசாமி (60). பழைய பாட்டில் பொறுக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் ஓசைப்பட்டி அருகே சென்றபோது, அந்தியூரிலிருந்து ஆப்பக்கூடல் நோக்கிச் சென்ற கார் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட குருசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் குருசாமியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதிக்கையில் குருசாமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.