பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட ஆண் முதலையை வனத்துறையினர் மீட்டு முதலைகள் மறுவாழ்வு மையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்தது. காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பின் போது அடித்து வரப்பட்ட முதலைகள் உணவு தேடி அவ்வப்போது ஒகேனக்கல் காவிரி காவிரி கரையோரப் பகுதிகளில் சுற்றித் திரிந்து வருகின்றன.
இந்த நிலையில் ஒகேனக்கல் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தின் பின் பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஒகேனக்கல் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த ஒகேனக்கல் வன அலுவலர் சேகர் தலமையிலான வனக்காப்பாளர் தாஸ், பரமசிவம் முதலைப்பண்ணை பராமரிப்பு காவலர் மூர்த்தி , மாதேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் 4 அடி நீளமும் ,55 கிலோ எடை கொண்ட ஆண் முதலையை புதன்கிழமை அதிகாலை பிடித்தனர்.
பின்னர் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் பிடிக்கப்பட்ட ஆண் முதலையை ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்திற்கு எடுத்துச்சென்றனர்.