திண்டிவனம் அருகே ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி பலி
திண்டிவனம் அருகே ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் விவசாயி இவரது மகள் ஹேமலதா(13). திண்டிவனம் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும் ராமகிருஷ்ணன்(3) என்ற மகனும் இருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஹேமலதா, தனது தம்பி ராமகிருஷ்ணனுடன் விளையாட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஆழமான பகுதியில் இறங்கியபோது நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
வீட்டின் வெளியே விளையாட்டிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரையும் காணவில்லை என்பதால் பெற்றோர் அவர்களை தேடினர். இந்த நிலையில் ஏரி பகுதிக்கு இருவரும் சென்றதை அறிந்த உறவினர்கள் அவர்களைத் தேடி அங்கு சென்றனர். அப்போது அந்த ஏரியில் இருவரும் மூழ்கி இறந்த நிலையில் சடலங்களாக கிடந்தனர். தகவலறிந்த கிளியனூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் சடலங்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.