முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ரூ.2.52 கோடி அபராதம் வசூலிப்பு

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ.2.52 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
சென்னையில் ரூ.2.52 கோடி அபராதம் வசூலிப்பு
பகிர்:

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ.2.52 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் ஆலோசனை மற்றும் உத்தரவுகளின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் தொழில், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அங்காடிகள் இயங்க பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். தளர்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அவ்வப்போது அரசு அறிவித்துள்ளது. தற்போது பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகள் மற்றும் பணி நிமித்தம் காரணமாக அதிக அளவில் வெளியே வருகின்றனர்.

பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், இரண்டு மீட்டர் இடைவெளியுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுதல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் வாயிலில் கிருமிநாசினி திரவங்கள் வைத்தல் போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (09.10.2020) பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-58, வேப்பேரி பிரதான சாலைக்குட்பட்ட பகுதிகளில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்த வணிக நிறுவனம் மற்றும் உணவகத்திற்கு மாநகராட்சி அலுவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டது. இதுநாள் வரை இராயபுரம் மண்டலத்தில் ரூ.44.21 இலட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 08.09.2020 அன்று ஒருநாள் மட்டும் ரூ.3.80 இலட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை மொத்தம் ரூ.2.52 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை வசூலிப்பது என்பது அரசின் நோக்கமல்ல.

பொதுமக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என ஆணையாளர் கோ.பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →