முகப்பு
தமிழ்நாடு

ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 1 டன் செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது
பகிர்:

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 1 டன் செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சாவடி வழியாக தினந்தோறும்  ஆந்திரம், பிகார், ஒரிசா, மகாராஷ்டிரம், தில்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் முலமாக காய்கறிகள், ஆட்டோ மொபைல்ஸ் உதிரிபாகங்கள் ஏற்றிக் கொண்டு வருவதும் போவதுமாக இருந்து வருகிறது. 

இதற்கிடையில் சில நாட்களாக ஆந்திரத்தில் இருந்து கார் இரு சக்கர வாகனங்களில் கஞ்சா, செம்மரம் தொடர்ந்து  கடத்தி வரப்பட்ட வருவது வழக்கமாகி உள்ளது. 

இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், முதல்நிலை காவலர் சுரேஷ், காவலர்கள் பன்னீர், விக்கி, விமல் ஆகியோர் தலைமையில் எளாவூர் சோதனைச்சாவடியில்  கார், இருசக்கர வாகனங்களை ஒவ்வொன்றாக தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஞாயிறு அதிகாலை ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு பதிவு கொண்ட சொகுசு கார் ஒன்று எளாவூர் சோதனைச்சாவடியை வேகமாக கடக்க முயன்றது. 

இந்த காரை சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் இருசக்கர வாகனத்தில் சென்று சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் மடக்கிப் பிடித்தார். 

பின்பு அந்த காரை எளாவூர் ஏழுகிணறு சோதனைச்சாவடிக்கு  போலீஸார் கொண்டு வந்து சோதனையிட்ட போது காரில் ஒரு டன் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் காரில் செம்மரம் கடத்தி வந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த ராவான் பப்பாய்   எனவும் ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிறகு பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மாதர்பாக்கம் வனசரகர் சுரேஷிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.