கொடைக்கானல் வாரச்சந்தை 6 மாதங்களுக்குப் பிறகு திறப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி
கொடைக்கானல் பி.டி. சாலையிலுள்ள ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை இன்று திறக்கப்பட்டது. இதில், வியாபாரிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து கடைகள் அமைத்திருந்தனர்.
கரோனா தொற்று படிப்படியாக பல்வேறு இடங்களில் குறைந்து வரும் நிலையில் தினசரி மற்றும் வாரச்சந்தைகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் பி.டி. சாலையிலுள்ள ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை இன்று திறக்கப்பட்டது. இதில், வியாபாரிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்தும் கடைகள் அமைத்திருந்தனர்.
மேலும், முகக்கவசம் அணிந்தவாறே பொதுமக்கள் சந்தைக்கு சென்று தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். பொதுவாக வாரச்சந்தையில் செவன்ரோடு, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை, அண்ணாசாலை ஆகிய பல்வேறு இடங்களில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம். ஆனால், நகராட்சி அதிகாரிகள் செவண்ரோடு பகுதியில் மட்டுமே கடைகள் வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கினர்.
இதனால் மற்ற வியாபாரிகள் தங்களுக்கும் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய வேண்டுமென கோரி, நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மற்ற வியாபாரிகளுக்கும் கடைகள் அமைத்துக்கொள்ளலாம் என நகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் நடத்தினர்.
கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வாரச்சந்தை திறக்கப்பட்டதற்கு பொது மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.