மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 100 நாள் வேலை கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பேரூராட்சி பகுதியிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இப் போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அழகர்சாமி, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட நிர்வாகி மணியம்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சோதுகுடி, பூச்சியேந்தல், ரசுலாசமுத்திரம், கீழாயூர்காலணி, பகைவென்றான் உள்ளிட்ட இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்கள் இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அதன்பின் கோரிக்கை அடங்கிய மனுவை பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் வழங்கினர்.