பல்லடம்: தீபாவளி பண்டிகையையொட்டி, மக்களின் தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்து தரப்படும் என்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கரோனா தொற்று விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகமாக உள்ளது. அதனால் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் தனியார் சொந்த மற்றும் வாடகை வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் தற்போது அரசு சார்பில் பேருந்து போக்குவரத்து 70 சதவீதம் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக காலை, மாலை வேளைகளில் அதிக அளவில் பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன.
மதிய வேளைகளில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருப்பதால் பேருந்து சேவை குறைவாகவுள்ளது. பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடங்களில் மக்கள் நலன் கருதி கூடுதலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் நீண்ட தூர பேருந்துகளுக்கு முன்பதிவு துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு மக்களின் தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்து தரப்படும். கரோனா தொற்று குறைந்தவுடன் பழையபடி இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும். அப்போது முழுமையாக பழையபடி பேருந்து போக்குவரத்து இயக்கப்படும் என்றார். உடன் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.சித்துராஜ், நகர அதிமுக துணை செயலாளர் ஏ.எம்.ராமமூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.