முகப்பு
தமிழ்நாடு

3 வயது நிறைந்த குழந்தைகள் விவரம் சேகரிப்பு: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் பகுதிகளில் உள்ள 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளின் பெயர், விவரங்களைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
3 வயது நிறைந்த குழந்தைகள் விவரம் சேகரிப்பு
பகிர்:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் பகுதிகளில் உள்ள 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளின் பெயர், விவரங்களைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

தமிழகம் முழுவதும் கடந்த வருடம், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் 5 முதல் 10 அரசு துவக்கப் பள்ளிகளில் மட்டும் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி.வகுப்புகள் துவக்கப்பட்டன. அதற்கு அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, நியமனம் செய்தது. அத்தகைய வகுப்புகள் கடந்தவருடம் முதல் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. 

அவ்வாறு எல்.கே.ஜி, யு.கே.ஜி துவக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நல்லமுறையில் நடப்பு கல்வியாண்டில் இருந்தது. அதுகுறித்து புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்த பள்ளிக்கல்வித்துறை, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி வளாகங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை தற்போது துவக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதனையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளையொட்டியுள்ள சென்சஸ் பகுதிகளில் 3 வயது நிரம்பிய குழந்தைகளின் விவரங்களை அந்தந்த தலைமையாசிரியர்கள் உடனடியாக அனுப்புமாறு பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. அதில் குழந்தைகளின் பெயர், வயது, பிறந்ததேதி, பெற்றோர் விவரங்களைத் தொகுத்துக் கேட்டுள்ளது.

இதன்மூலம் கிராமப்பகுதிகள் உள்பட அனைத்து அரசு, நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகளைத் துவக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து தலைமையாசிரியர்களும், அந்தந்த வட்டார வள மையங்கள் மூலம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அக்.20ந் தேதி மாலை அனுப்பிவைத்தனர். அதன்பின்னர், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலிருந்து மாவட்டம் முழுவதும் தொகுக்கப்பட்ட விவரங்கள், மாநில பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பும் பணி நடைபெற உள்ளது.

அந்த தகவல்களிலிருந்து மாநிலம் எத்தனை பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் துவக்கப்படும். அதற்கு எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்படுவார்கள் என்பது நவம்பர் மாத மத்தியில் தெரியவரும். இப்பணி மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூடுதலாகும் என்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.