வாழப்பாடி : 6 ஆண்டுகளாகியும் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராததால், ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சியில், 6 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமலேயே பாழடைந்து வருகிறது.
ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு பெற்று, மின் மோட்டார் பொருத்தி, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சி சின்னத்தம்பிப்பள்ளம் குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்காக, கடந்த 2013 -14 தாய் திட்டத்தின் கீழ், ரூ 4 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
ஒன்றிய குழு உறுப்பினர் நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தப்பட்டது. 6 ஆண்டுகள் கடந்தும் ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு பெற்று மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி, இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆழ்துளைக்கிணறு, மேல்நிலை குடிநீர் தொட்டி ஆகியவை பயன்பாட்டிற்கு வராமலேயே பாழடைந்து வருகிறது.
இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீருக்கு வழியின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு பெற்று, மின் மோட்டார் பொருத்தி மேல்நிலை குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றி இப்பகுதி பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகிக்க, துக்கியாம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.