பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 16 ஏழை மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த நிதி ரூ.1 லட்சத்தில் அறிதிறன்பேசிகளை (ஸ்மார்ட் போன்)வாங்கிக் கொடுத்து, இணையம் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்திருக்கிறார் அப்பள்ளியின் உதவித் தலைமையாசிரியை பைரவி.
கரோனா பொது முடக்கம் காரணமாக, பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் "வீட்டிலிருந்தே பள்ளி' என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இணையம் மூலமாக பாடம் கற்பித்து வருகின்றனர். அந்த வகுப்புகளில் 10-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து பள்ளியின் உதவித் தலைமையாசிரியையும், கணித ஆசிரியையுமான பைரவி நேரில் சென்று விசாரித்தபோது மாணவ, மாணவிகளின் ஏழ்மையான குடும்பச் சூழல் தெரிய வந்தது.
இதையடுத்து ஆசிரியை பைரவி, அறிதிறன்பேசி வாங்க இயலாத மாணவ, மாணவிகளாக இருந்த 16 பேரின் பட்டியலைத் தயார் செய்து, தனது சொந்த நிதியான ரூ.1 லட்சத்தில் 4ஜி சேவையுடன் கூடிய அறிதிறன்பேசிகளை வாங்கி, அதை பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் வழங்கினார்.