எம்ஜிஆரின் சகோதரர் மகன் சந்திரன் காலமானார்; அதிமுக இரங்கல்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சகோதரர் மகன் எம்.சி. சந்திரன் கரோனாவால் பலியானார். அவரது மறைவுக்கு அதிமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சகோதரர் மகன் எம்.சி. சந்திரன் கரோனாவால் பலியானார். அவரது மறைவுக்கு அதிமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியின் மகன் எம்.சி. சந்திரன் (75) கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
சகோதரர் சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.