விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தினர் சார்பில்சிறப்பு புத்தகக் கண்காட்சி வரும் செப்.20ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தினரும்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞர்கள் சங்கத்தினரும்,அருப்புக்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் அமைப்பினர் ஆகியோர் இணைந்து நடத்தும் சிறப்புப் புத்தகக் கண்காட்சியானது அருப்புக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்றுவருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் மு.கார்த்திக் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஜி.மணிமாறன் ஆகியோர் கூறியதாவது,
அருப்புக்கோட்டை காமராஜர் திருமண மண்டபத்தில் நகர் காவல்துணைக் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட இப்புத்தகக் கண்காட்சியானது வரும் செப்டம்பர் 20ம் தேதிவரை நடைபெற உள்ளதெனவும், காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரை புத்தக விற்பனை நடைபெறுமெனவும், அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அப்போது வாடிக்கையாளர்கள் முகக்கவசம்அணிந்து வரவேண்டுமெனவும், கைகளில் கிருமி நாசினி இட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவர்கள் அறிவுறுத்தியதுடன், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், முக்கியப் பிரமுகர்கள், கல்வியாளர்கள், பள்ளி, கல்லூரி கல்வி நிறுவனத்தினர் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சிறப்பான ஆதரவை வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.