தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து மதுரை மாநகராட்சிக்குக் குடிநீர் கொண்டு செல்வதைக் கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் போராட முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 5 மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் லோயர் கேம்பில் இருந்து மதுரை மாநகருக்கு நாள்தோறும் 100 கன அடி தண்ணீர் பைப்லைன் மூலம் கொண்டு சென்றால், தேனி மாவட்டத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
மேலும் இரண்டு போக சாகுபடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். ஆண்டிபட்டி வட்டார பகுதிகள் வறட்சியாக மாறும். இதனைக் கருத்தில் கொண்டு வைகை அணைக்கு திறந்தவெளி கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். வைகை அணை இதில் 30 அடி உயரமுள்ள சகதி, கழிவுகளை அகற்றித் தூர்வார வேண்டும்.
ஏற்கெனவே தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாகக் கிடைக்கும்போது மதுரை மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்குத் தண்ணீர் கொண்டு சென்றால் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. ஆதலால் அதிகாரிகள் கொண்டுவந்த இந்தத் திட்டத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
இதனை வலியுறுத்தி செப்.21ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கூடலூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது, உள்ளிட்ட தீர்மானங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.