மணப்பாறை: மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 13, 14-வது வார்டுகளைச் சேர்ந்த கோவிந்தராஜபுரம், கரிக்கான்குளம்தெரு, காந்திநகர் ஆகிய பகுதியில் கடந்த சில நாள்களாக பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் முறையாக நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதினர் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சனிக்கிழமை காலை கோவில்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் பெண்கள் காலிகுடங்களுடன், மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் இந்த சாலையில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த நகராட்சி நிர்வாகிகள், காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீர்செய்து தருவதாக உறுதி கூறினார். அதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.