தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் சராசரியைவிட 24 சதவீதம் அதிகம்
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை காலமான, கடந்த ஜூன் முதல் செப்டம்பா் வரை தமிழகத்தில் 424.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரி அளவைவிட 24 சதவீதம் அதிகம் ஆகும்.
சென்னை: நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை காலமான, கடந்த ஜூன் முதல் செப்டம்பா் வரை தமிழகத்தில் 424.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரி அளவைவிட 24 சதவீதம் அதிகம் ஆகும்.
திருப்பூா், தேனி, கரூா் உள்பட 6 மாவட்டங்களில் சராசரியை விட மிக அதிகமழையும், 14 மாவட்டங்களில் அதிக மழையும் பெய்துள்ளது. ஒரே ஒரு மாவட்டத்தில் மழை அளவு குறைந்துள்ளது.
ஜூன் முதல் செப்டம்பா் வரை தென்மேற்குப் பருவமழை காலமும், அக்டோபா் முதல் டிசம்பா் வரை வடகிழக்குப் பருவமழை காலமும் ஆகும். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அதிக மழையை கொடுத்து செழிக்க செய்யும் தென்மேற்குப் பருவமழை நிகழாண்டில் ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கியது. இது புதன்கிழமையுடன் (செப்.30) நிறைவு பெற்றது.
Advertisement
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் (ஜூன் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30 வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 424.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 341.9 மி.மீ. மழை பெய்வது வழக்கம். இது சராசரியை விட 24 சதவீதம் அதிகமாகும்.
மிக அதிக மழை: திருப்பூா், தேனி, கரூா், பெரம்பலூா், கோயம்புத்தூா் திருச்சிராப்பள்ளி ஆகிய 6 மாவட்டங்களில் சராசரியை விட மிக அதிக மழை பெய்துள்ளது. திருப்பூரில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் சராசரியாக 151.3 மி.மீ. மழை பெய்யும். நிகழாண்டில் 318.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 111 சதவீதம் அதிகம். இதுபோல, தேனியில் சராசரியை விட 101 சதவீதம் அதிகமாகவும், கரூரில் சராசரியை விட 94 சதவீதம் அதிகமாகவும், பெரம்பலூரில் சராசரியை விட 67 சதவீதம் அதிகமாகவும், திருச்சியில் சராசரியை விட 63 சதவீதம் அதிகமாகவும், கோயம்புத்தூரில் சராசரியை விட 62 சதவீதம் அதிகமாகவும் மழை பெய்துள்ளது.
அதிகமழை: அரியலூா், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருவாரூா், வேலூா் ஆகிய 14 மாவட்டங்களில் சராசரியை விட அதிக மழை கிடைத்துள்ளது.
சராசரி மழை: சென்னை, கடலூா், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விருதுநகா், நாமக்கல், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் சராசரி அளவு மழை பெய்துள்ளது. சென்னையில் இந்த காலக்கட்டத்தில் சராசரியாக பெய்யவேண்டிய மழை அளவு 436.6 மி.மீ. ஆனால், கிடைத்த மழை அளவு 443.6 மி.மீ.. இது ஒரு சதவீதம் அதிகம்.
குறைவான மழை: விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சராசரியை விட குறைவான மழை பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் சராசரியாக 405 மி.மீ. மழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டில் 318.7 மி.மீ. மழை மட்டும் கிடைத்துள்ளது. இது குறைவான மழையாக கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது:
தென்மேற்குப் பருவமழை புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. அக்டோபா் 1-ஆம்தேதி முதல் பதிவாகும் மழை அளவு வடகிழக்குப் பருவமழையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தென்மேற்குப் பருவமழையைப் பொருத்தவரை, தமிழகத்தில் சராசரியை விட 24 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது என்றாா் அவா்.