முகப்பு
தமிழ்நாடு

ஈரோட்டில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்வு

ஈரோட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

Updated On : 26 மார்ச், 2020 at 4:47 PM
பகிர்:

ஈரோட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவர்களுடன் நெருங்கிப் பழகிய ஈரோட்டைச் சேர்ந்தவர் ஒருவருக்கும் கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தாய்லாந்திலிருந்து இஸ்லாமிய மத பிரசாரத்திற்காக ஈரோடு வந்து  கொல்லம் பாளையம், சுல்தான் பேட்டை பகுதியில் தங்கி இருந்த 5 பேர், கடந்த 16ஆம் தேதி பிடித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த 21 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் உட்பட 15 பேர் அம்மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தனர்.

Advertisement

அவர்களது ரத்தம், சளிப்பரிசோதனைக்கு, சென்னை கிண்டிங் கிங்ஸ் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பினர். அதில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததால் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர் என்பதும் தாய்லாந்திலிருந்த வந்த நபர்களுடன், இவர் பல்வேறு இடங்களுக்குச் சென்றதும் தெரியவந்தது. இதுவரை வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும் தொற்று இருந்தது என்பதால் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் அச்சம் தணிந்திருந்தனர்.

தற்போது, சமூக தொற்றாக ஈரோட்டைச் சேர்ந்தவருக்கு வந்ததால் ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை, மஜித் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 

மூன்றாவதாகப் பாதித்த நபர், எந்த பகுதியைச் சேர்ந்தவர் எனக் கூற இயலாது. அப்பகுதியில் தேவையற்ற பதட்டமான சூழல் ஏற்படும். ஏற்கனவே கொல்லம் பாளையம், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதியில் 295 குடும்பத்தைச் சேர்ந்த 1,118 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 28 நாட்களுக்கு இதே நிலையில் இருப்பதுடன் அவர்களில் எவருக்கும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்படாமல் இருக்க வேண்டும். அவற்றைக் கண்டறியும் பணியிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்து நபருக்கு மட்டும் தொற்று இருந்திருந்தால் அத்துடன் இப்பிரச்னை தீர்வு கண்டிருக்கும். சமூக தொற்றாக, ஈரோட்டைச் சேர்ந்த நபருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதால் தாய்லாந்து நாட்டினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் பலருக்கும் பரவி இருக்குமோ என்ற அச்சமான சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.