பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு 800 கரோனா பரிசோதனைகள்: பேராசிரியர் சங்கர் நடேசன்
காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயிரிதொழில்நுட்பவியல் துறை பேராசிரியரும், முன்னாள் பதிவாளருமான சங்கர் நடேசன் கூறியது:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயிரிதொழில்நுட்பவியல் துறை பேராசிரியரும், முன்னாள் பதிவாளருமான சங்கர் நடேசன் கூறியது:
பல்கலைக்கழகத்தின் உயிரிதொழில்நுட்பவியல் துறையில் இருந்து மதுரை அரசு மருத்துவமனை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு கரோனா தொற்றைக் கண்டறியும் தலா 1 பிசிஆர் கருவி வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் தற்போது 3 பிசிஆர் பரிசோதனைக் கருவிகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிசிஆர் பரிசோதனைகளில் அனுபவம் இல்லாதவர்கள் மூலம் ரத்த மாதிரி பரிசோதனை செய்ய 6 மணி நேரமாகிறது.
ஆனால், பல்கலைக்கழக ஆய்வகங்களில் பிசிஆர் கருவிகளில் ஏற்கெனவே அனுபவம் உள்ள ஆய்வு மாணவர்கள், தொழில்நுட்பநர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் 4 மணி நேரத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
Advertisement
ஒரு பிசிஆர் கருவியில் ஒரே சோதனையில் 4 மணி நேரத்தில் 40 ரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடியும். அதன்படி, நாள் ஒன்றுக்கு 6 ஷிப்டுகளில் 240 ரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடியும். 3 பிசிஆர் கருவிகளை பயன்படுத்தும்போது நாள் ஒன்றுக்கு 800 வரையிலான ரத்த மாதிரிகள் பரிசோதிக்க முடியும். இதன்படி, ஒரு மாதத்தில் 24 ஆயிரம் வரை ரத்த மாதிரிகள் பரிசோதிக்க முடியும்.
எனவே, பல்கலைக்கழகம் கரோனா ரத்த மாதிரிகளை பரிசோதிக்கவும், உதவி செய்யவும் தயார் என்று சுகாதாரத் துறைக்கும், மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கும் முன்னரே தெரிவித்துவிட்டோம். மேலும், பிசிஆர் கருவி மூலம் ரத்த மாதிரிகளை பரிசோதிப்பதற்கு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், மருத்துவமனை தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்க தயார் என்று தெரிவித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்களை கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தினால் தமிழகத்தில் கரோனா தொற்று எந்த அளவு உள்ளது என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்க முடியும். எனவே, பல்கலைக்கழகங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.