வேதாரண்யத்தில் கொட்டித் தீர்த்த மழை: பெருக்கெடுத்த வெள்ளம்; சம்பா நெல் வயல்கள் பாதிப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளை மூழ்கடித்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளை மூழ்கடித்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அறுவடைக்குத் தயாராகி வந்த சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால் கதிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழைப் பொழிவு ஏற்பட்டு, திங்கள்கிழமை பகல், இரவு முழுவதும் விடாமல் கொட்டித் தீர்த்தது.
Advertisement
Advertisement
செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 178.4 மி.மீட்டரும், தலைஞாயிறில் 142.6 மி.மீட்டரும் மழை பதிவானது.
கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் நெற்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே வயல்களில் தண்ணீர் வடியாது இருந்த நிலையில் தற்போது கொட்டித் தீர்த்து வரும் மழையால் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி, அறுவடைக்குத் தயாரக உள்ள நெல் வயல்களை வெள்ள நீர் சூழ்ந்து, கதிர்களை பாதிக்கச்செய்துள்ளது.
நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பல இடங்களில் பெருக்கெடுத்த மழை வெள்ளம் சாலைகளில் வழிந்தும், உடைப்புகளை ஏற்படுத்தியும் ஓடுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மழை குறைந்து காணப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.