வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்துக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. இது வன்னியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் பல்வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த அபிலேஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன் இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.