கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆங்கூர்பாளையத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் ஒடிந்து சேதமானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில், கம்பம் அருகே உள்ள ஆங்கூர்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாழை, நாழி பூவன், பச்சை வாழை ஆகிய வகையான வாழை மரங்கள் காற்றின் வேகம் தாங்காமல் ஒடிந்து விழுந்தன.
இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று காரணமாக விவசாயம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
மிகவும் கஷ்டமான சூழலில் கடன் பெற்று வாழை விவசாயம் செய்து, அடுத்த மாதம் தார் வெட்டும் தருவாயில் மழையுடன் வீசிய காற்றில், காற்றின் வேகம் தாங்காமல் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து நாசமாகி உள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்றனர்.