சத்தியமங்கலத்தில் 100 படுக்கை வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் தயார்
சத்தியமங்கலத்தில் 100 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தயாராகிறது.
சத்தியமங்கலத்தில் 100 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தயாராகிறது. நோயாளிகள் அறையில் தண்ணீர் வசதி, ஃபேன் போன்றவைகளை அமைக்கும் ஆரம்ப கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் நகராட்சி, பவானிசாகர், உக்கரம், புன்செய் புளியம்பட்டி வட்டார சுகாதார மையங்களில் 150க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோயால் பாதிக்கப்பட்டோர் சிகிசைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தற்போது நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பெருந்துறை அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதியில்லாத காரணத்தால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் தற்போது கரோனா சிகிச்சை அறைகளாக மாற்றும் ஆரம்ப கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இம்மையத்தில் 300 படுக்கைகள் அமைப்பதற்கு வசதியுள்ள நிலையில் தற்போது 100 படுக்கைகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு அறையில் 14 நோயாளிகள் தங்க வைக்கப்படுவர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இம்மையத்திற்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் நோயாளிகளை அழைத்து வருவதற்கு வசதியாக அரசுப் பேருந்து தயாரான நிலையில் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான தண்ணீர், கழிப்பறை மற்றும் காற்றோட்டமான சூழல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.