முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வியாழக்கிழமை முடக்கியுள்ளனர்.
மாநகராட்சிகளில் ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்த முறைகேடு தொடா்பாக, முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணம், ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணினிகள், ஹாா்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா். மேலும் அவரது சொத்துகள் குறித்த அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் நேற்று சோதனை செய்ததுடன் அப்போது அங்கிருந்த வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை செய்தனா்.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக எஸ்.பி. வேலுமணியில் வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் முடக்கியுள்ளனர்.
மேலும், பறிமுதல் செய்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.