கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. தற்போது திமுக அரசு பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆன நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ள பயனாளிகளின் விவரங்களை பெறுவதற்கான சுற்றறிக்கை கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் வருகிற 16 ஆம் தேதிக்குள் இதுகுறித்த விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பயனாளிகளின் ஆதார் எண், குடும்ப விவரங்கள் உள்ளிட்டவற்றையும் தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் அறிவிப்பு வரலாம் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.