அதிமுக ஆட்சி மீது அவப்பெயர் ஏற்படுத்தவே இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுகிறார்கள் என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜி இன்று காலை ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் தங்கமணி கூறியது:
“கடந்த ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என கணக்கெடுத்தோம். நிலக்கரி தட்டுப்பாடு வந்தபோதே ஆய்வு நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. நாங்கள் கண்டுபிடித்ததை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சி மீது அவப்பெயர் ஏற்படுத்தவே இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுகிறார்கள். நிலக்கரி தொடர்பாக சட்டப்பேரவையில் நேரம் ஒதுக்கினால் நான் பதிலளிக்க தயாராகவுள்ளேன்.
மின் உற்பத்திக்காக வாங்கிய கடன் குறித்து நானும் விளக்கமளித்துள்ளேன். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுத்தால், நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.”