சென்னையில் 4ஆம் தேதி 1,600 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
சென்னையில் 4ஆம் தேதி 1600 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் 4ஆம் தேதி 1600 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை கரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு விதமான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வெளியில் வரும் பொழுது முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற தமிழக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றவும், தவறாமல் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சென்னையில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து 10,39,704 நபர்கள் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 11,83,905 கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
தற்பொழுது உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலம்
பெங்ளூருவில் இரண்டு நபர்களுக்கு ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, நோய் எதிப்பு சக்தியை அதிகரித்து கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது இன்றியமையாதது ஆகும்.
04.12.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1600 முகாம்களுடன் மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் காலை
9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடத்தப்பட உள்ளன.
எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொண்டு கோவிட் தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள்
https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.