வெலிங்டன் ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்துகிறார்.
கோவையிலிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் புதன்கிழமை பலியாகினர். ராணுவ கேப்டன் வருண் சிங் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் முக்கிய பிரமுகர்களின் அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மூலம் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரில் உள்ள மேஜர் நாகேஷ் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.
விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து தெலங்கானா ஆளுநரும் புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், விபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், 13 பேரின் உடல்கள் சூலூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, 'ஹெலிகாப்டர் விபத்து குறித்த தகவல் கேட்டதும் நெஞ்சமே நொறுங்கிவிட்டது. நாட்டுக்கு பேரிழப்பு. நாட்டுக்கு பாதுகாப்பாக சேவை மனப்பான்மையுடன் அனைவரும் இருக்க வேண்டும். நாட்டுப்பற்றுடன் இருப்பதே இறந்தவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
ராணுவ கேப்டன் வருண் சிங்கின் உடல் உறுப்புகள் நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. உயர் சிகிச்சைக்காக வேறு இடத்திற்கு அனுப்படுகிறார். அவர் விரைந்து மீண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய ஒரே பிரார்த்தனை' என்றார்.
இதையும் படிக்க | வெலிங்டனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உடல்