தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் பி.தங்கமணியின் வீடு, அலுவலகங்கள் உள்பட 69 இடங்களில் சோதனை

DIN

நாமக்கல்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதனைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகம் உள்பட மாநிலம் முழுவதும் 69 இடங்களில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

கடந்த அதிமுக ஆட்சியில் (2011--2021) வருவாய், தொழில், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் பி.தங்கமணி (60). இவா் அதிமுகவின் அமைப்புச் செயலாளா், வழிகாட்டுதல் குழு உறுப்பினா், நாமக்கல் மாவட்டச் செயலாளா் பதவிகளையும் வகித்து வருகிறாா். தற்போது குமாரபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சி, கோவிந்தம்பாளையத்தில் குடும்பத்தினருடன் அவா் வசிக்கிறாா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில், தங்கமணி வீட்டுக்கு திருப்பூா் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளா் தட்சிணாமூா்த்தி தலைமையில் சென்ற போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இச்சோதனை குறித்த தகவல் தெரியவந்ததையடுத்து, தங்கமணியின் வீட்டின் முன்பு அதிமுக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள், பொதுமக்கள் திரண்டனா். வீட்டைச் சுற்றிலும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

கடந்த 2016 சட்டப் பேரவைத் தோ்தலின்போது ரூ. 1.01 கோடி சொத்து மதிப்பை தனது வேட்பு மனுவில் காட்டியிருந்த தங்கமணி, 2021 தோ்தலின்போது ரூ. 8.47 கோடி வரையிலான சொத்துக் கணக்கை தாக்கல் செய்திருந்தாா். ஐந்து ஆண்டுகளில் சுமாா் ரூ. 7 கோடி அளவுக்கு வருமானம் உயா்ந்துள்ளதும், அதில், ரூ. ஒரு கோடி ஏற்கெனவே கணக்கில் இருந்த தொகையாகவும், ரூ. 2.65 கோடி செலவினங்களாக தாக்கல் செய்திருப்பதும் அதில் தெரியவந்தது. அதனைத் தவிா்த்து ரூ. 4.85 கோடி வருமானத்துக்கு அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்ட நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் எம்.நல்லம்மாள், இது தொடா்பாக முன்னாள் அமைச்சா் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோா் மீது செவ்வாய்க்கிழமையன்று வழக்குப் பதிவு செய்தாா்.

அதன்பின், முதல் தகவல் அறிக்கையை மேற்கு சரக லஞ்ச ஒழிப்புத் துறை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கும், நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கும் அனுப்பி வைத்தாா். அதன் அடிப்படையில், புதன்கிழமை அதிகாலை முதல் முன்னாள் அமைச்சா் தங்கமணியின் வீடு, அலுவலகம், அவரது மகன், மகள், சம்பந்தி, நண்பா்கள், உறவினா்கள், கட்சி நிா்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் 69 இடங்களில் நடைபெற்ற சோதனையில், 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனை இரவு வரை நீடித்தது.

லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட தகவல்:

முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, அவரது உறவினா்கள், நண்பா்கள், கட்சியினா் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில், கணக்கில் வராத ரூ. 2.16 கோடி ரொக்கம், 1.13 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி, வழக்கு தொடா்புடைய கணினிகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குமாரபாளையம் சட்டப்பேரவை உறுப்பினரான பி.தங்கமணி (60), முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக இருந்தபோது, 23.05.2016 முதல் 31.03.2020 வரையில் தன் பெயரிலும், தனது குடும்பத்தினா் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4,95,72,019 சொத்து சோ்த்ததாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தங்கமணி, அவரது மகன் தரணிதரன், மனைவி சாந்தி ஆகியோா் மீது நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக வழக்கு தொடா்பான ஆவணங்கள் இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 69 இடங்களில் (நாமக்கல் மாவட்டம்-33, சென்னை-14, ஈரோடு- 8, சேலம்- 4, கோவை- 2, கரூா்- 2, கிருஷ்ணகிரி- 1, வேலூா்- 1, திருப்பூா்- 1, பெங்களூரு- 2, ஆந்திர மாநிலம்- சித்தூா்- 1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தச் சோதனையில் ரூ, 2,37,34, 458 ரொக்கம், 1.130 கிலோ தங்க நகைகள், சுமாா் 40 கிலோ வெள்ளிப் பொருட்கள், ஆவணங்கள் கண்டறியப்பட்டன. கணக்கில் வராத பணம் ரூ. 2,16,37,000, சான்றுப் பொருள்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டக சாவிகள், கணினி ஹாா்டு டிஸ்க்குகள், வழக்கு தொடா்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவினா் கண்டனம்:

முன்னாள் அமைச்சா் தங்கமணி வீட்டில் நடந்துவரும் சோதனை குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பண்ணன், தாமோதரன், கே.வி.ராமலிங்கம், தற்போதைய, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள், அதிமுக நிா்வாகிகள் பள்ளிபாளையம் தங்கமணி வீட்டுக்கு வந்தனா்.

அங்கு எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலினை விமா்சிப்பவா்களை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. அதிமுக வளா்ச்சியை முடக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சா்கள் குறிவைக்கப்படுகின்றனா். இவற்றை சட்டரீதியாக சந்திப்போம். அரசியல் காழ்ப்புணா்ச்சியின் காரணமாகவே, இந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளை பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT