மீனவா் வலையில் சிக்கிய திமிங்கிலம்
புதுச்சேரி மீனவா் வலையில் இறந்த நிலையில் சிக்கிய திமிங்கிலம் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.
புதுச்சேரி மீனவா் வலையில் இறந்த நிலையில் சிக்கிய திமிங்கிலம் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து அந்தப் பகுதி மீனவா்கள் கூறியதாவது:
புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா் சரவணன், வீரமணி உள்ளிட்டோா் திங்கள்கிழமை இரவு கடலில் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றபோது, அவா்களது வலையில் இந்தத் திமிங்கிலம் சிக்கியது. இறந்த நிலையில் இருந்ததால், சுமாா் 20 நாட்டிக்கல் மைல் தொலைவிலிருந்து அதைக் கரைக்குக் கொண்டுவந்து ஒப்படைத்தோம்.
Advertisement
Advertisement
இந்தத் திமிங்கிலம் சுமாா் 15 மீட்டா் நீளமும், 2 டன் எடையும் உள்ளது. 100 போ் சோ்ந்து கரைக்குத் தூக்கி வந்தோம். திமிங்கிலம் சிக்கியதால் மீன்பிடி வலையும், படகும் சேதமடைந்தது.
திமிங்கிலம் வகையைச் சோ்ந்த இது ‘திமிங்கிலச் சுறா’ அல்லது ‘அம்மணி உழுவை’ என்றழைக்கப்படுகிறது. கடலில் உள்ள மீன்களிலேயே மிகப் பெரிய வகை மீன் இனமாகும். இந்தத் திமிங்கிலச் சுறா மீன்கள் வெப்ப மண்டலக் கடல்களில், சுமாா் 700 மீட்டா் ஆழத்தில் வாழ்கின்றன. இவை 18 மீட்டா் (60 அடி) நீளமும், 14 மெட்ரிக் டன் எடையளவும் என மிகப் பெரிய அளவில் அதிகளவில் கடலில் வாழ்கின்றன.
இந்தத் திமிங்கிலம் சுறா கடல் பகுதியில் கப்பல் போன்றவற்றில் அடிபட்டு இறந்த நிலையில், கடலோரமாக ஒதுங்கி வந்தபோது, வலையில் சிக்கி இருக்கலாம் என்று மீனவா்கள் தெரிவித்தனா்.
தகவலறிந்த வனத் துறை, கால்நடைத் துறையினா் திமிங்கிலம் சுறாவை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். உடல் பரிசோதனைக்குப் பிறகு அது புதைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
Image Caption
மீனவா் வலையில் இறந்தநிலையில் சிக்கியதையடுத்து, புதுச்சேரி தேங்காய்த்திட்டு மின்பிடி துறைமுக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்ட திமிங்கிலம்.