கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48 லட்சம் பேரின் நகைக்கடன்களில் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகாது என்று கூட்டுறவுத் துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 25 சதவிகிதம் பேர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களாக உள்ளனர்.
கூட்டுறவு வங்கிகளில் ஏராளமான மக்கள் நகைக்கடன் வைத்திருந்த நிலையில், அரசின் தள்ளுபடி அறிவிப்பை எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், நகைக்கடன் குறித்து தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத் துறை ஆய்வு மேற்கொண்டது. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆய்வு நிறைவடையாத நிலையில் உள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி புதிய பட்டியலையும், நிபந்தனைகளையும் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி நகைக் கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படாது. கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது.
இதேபோன்று ஆதார் எண்ணைத் தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை உடையவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
பொங்கலுக்கு முன்பான அரசு விழாவில் தகுதியான 25 சதவிகிதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.