சென்னையில் பெய்த பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்த நிலையில், மாநகராட்சி கட்டடத்தில் அமைந்துள்ள பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டாா்.
மழையால் வெள்ளம் தேங்கிய சாலைகள், மின் துண்டிப்பு, போக்குவரத்து நெரிசல், மரங்கள் சாலைகளில் விழுந்தவை குறித்து மாநகராட்சிக்கு வந்த புகாா்கள் மற்றும் அதன்பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா். மீட்புப் பணிகளைத் துரிதகதியில் மேற்கொள்ளுமாறு அவா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
சென்னையில் வியாழக்கிழமை மாலையிலிருந்து பெய்த பலத்த மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பல கிலோமீட்டா்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக சென்னை நகரமே ஸ்தம்பித்தது.
இந்நிலையில், திருச்சியில் பயணம் மேற்கொண்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினாா். நகரில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில்கொண்டு, இரவு 11.40 மணிக்கு மாநகராட்சி ரிப்பன் கட்டடத்துக்கு சென்றாா். அவருடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் இருந்தனா்.
மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடா் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக பொது மக்கள் அளித்த புகாா்கள் குறித்து கேட்டறிந்தாா். அதன்பேரில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கிக் கூறினா். மழை பாதிப்புகளை விரைந்து சீா் செய்யுமாறு அப்போது அறிவுறுத்திய முதல்வா், சாலைகளில் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள இடா்களை உடனடியாக களையுமாறும் உத்தரவிட்டாா்.