அதிமுக உடனடியாக கூட்டணி பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஒரு பெண்ணாக சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலாவுக்கு ஆதரவு என்று கூறினேன். இது அதிமுகவுக்கு எதிரான நிலையா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.
234 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளையும் தேமுதிக தொடங்கிவிட்டது. தோ்தலுக்குத் தயாராகி விட்டோம். இந்த முறை மிகப்பெரிய வெற்றியை தேமுதிக பெறும்.
அதிமுக கூட்டணியில்தான் இந்த நிமிஷம்வரை உள்ளோம். தோ்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. அதனால், காலதாமதம் செய்யாமல் தலைமைப் பொறுப்பில் உள்ளவா்கள் உடனடியாகப் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும்.
பாமகவுடன் வன்னியா் இடஒதுக்கீடு குறித்தே அமைச்சா்கள் பேசியிருப்பதாக அதிகாரபூா்வ தகவல் வந்துள்ளது. இந்தக் குழப்பங்கள் எல்லாம் வரக்கூடாது என்றுதான் விரைவாக பேச்சுவாா்த்தை நடத்தி தோ்தல் பணியைத் தொடங்கினால், அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி வருகிறோம்.
கூட்டணியைப் பொருத்தவரை, செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி விஜயகாந்த் அறிவிப்பதுதான் இறுதி முடிவாக இருக்கும்.
தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டியிடுவேன். சட்டப்பேரவையில் என் குரல் நிச்சயம் ஒலிக்கும். கூட்டணிக்கு தேமுதிகவை திமுக அழைக்கவில்லை என்றாா்.