முகப்பு
தமிழ்நாடு

சபதம் செய்ய சசிகலா வந்துவிடுவார் என்பதற்காக ஜெ. நினைவிடம் மூடல்: உதயநிதி

ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு சசிகலா சபதம் செய்ய வந்து விடுவார் என்பதற்காக மூடப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவிடத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி ஸ்டாலின்.உடன் எம்.பி.க.செல்வம்,எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர்,எழிலரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்
பகிர்:

காஞ்சிபுரம்: ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு சசிகலா சபதம் செய்ய வந்து விடுவார் என்ற காரணத்திற்காகவே அண்மையில் திறக்கப்பட்ட நினைவிடம் மூடப்பட்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.

அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியது,

ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது நடந்து வரும் அடிமை அதிமுக அரசு மாநிலத்திற்கான கல்வி உரிமைகளை பறிகொடுத்து வருகிறது.

நீட் தேர்வால் இதுவரை 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். சசிகலா பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்ததும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து சபதம் செய்ய வருவார் என்ற காரணத்திற்காகவே அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நினைவு மண்டபம் மீண்டும் மூடப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வந்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

அதே போல அதிமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எடப்பாடி கே.பழனிசாமி மக்களால் முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை. அடுத்தவர் காலில் விழுந்து முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவியில் நீடித்து வருகிறார்.

மோடியின் அடிமையாக, பா.ஜ.கட்சியின் அடிமையாக எடப்பாடி கே.பழனிசாமி இருந்து வருகிறார். அதிமுக என்றால் அண்ணா திமுக இல்லை, அடிமை திமுக என்று தான் சொல்லத் தோன்றுகிறது என்றும் உதயநிதிஸ்டாலின் பேசினார்.

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பெரியார் தூண் பகுதியிலிருந்து அமைதிப்பேரணியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணா நினைவு இல்லத்திலும் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அங்கிருந்த விருந்தினர் வருகைப் பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.

காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி முன்பாக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். பின்னர் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள நெசவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் குறைகளையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

உதயநிதி ஸ்டாலினுடன் எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் உட்பட கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் பலரும் அண்ணை நினைவு தின அமைதிப்பேரணியில் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →