நாமக்கல்லில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் திருவிழா மற்றும் கண்காட்சி கருத்தரங்கு நகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம், மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தொழில்நுட்ப மேலாண் முகமை ஆகியவை சார்பில் மாவட்ட அளவிலான வேளாண் திருவிழா மற்றும் கண்காட்சி கருத்தரங்கு நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழாவை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தொடங்கி வைத்தார். வேளாண் இணை இயக்குனர் அசோகன், வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த 5 விவசாயிகளுக்கு ஆட்சியர் விருது வழங்கி கெளரவித்தார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் பேசியதாவது: உழவுத் தொழிலானது உன்னதமான தொழில். மருத்துவர், ஆசிரியர், அதிகாரி, அரசியல்வாதி எனப் பல்வேறு பதவிகளை யார் வகித்தாலும் விவசாயிக்கு இணையாக கருத முடியாது. உழவுத் தொழில் மேம்பாடு அடைய அனைவரும் விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிக்க வேண்டும் என்றார்.
வேளாண் கண்காட்சியில் இயற்கை உணவு வகைகள், பயிர் வகைகள், நாட்டுக்கோழி இனங்கள், உணவு வகைகள், இனிப்பு பொருட்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.