ஊத்தங்கரை: வாசுதேவ கண்ணன் திருக்கோயில் 2-ம் ஆண்டு தொடக்க விழா
ஊத்தங்கரை அடுத்த பம்பாறு அணைப்பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வாசுதேவக்கண்ணன் திருக்கோயில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பம்பாறு அணைப்பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வாசுதேவக்கண்ணன் திருக்கோயில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா வெகு சிறப்பாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் கலச பூஜை, யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹுதி, அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு திருமஞ்சன பூஜையும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர், மதுரை ஸ்ரீமஞ்சள் மலையருள் அருட்சித்தர் புலவர் இ. பூவலிங்கனார் பெயர்ப்பலகையை ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன் திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக குழந்தைக்கு எடைக்கு எடை பணம் செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மருத்துவர் என்.இளையராஜா, ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டி, கோயில் நிர்வாக குழுவைச் சேர்ந்த லட்சுமிநாராயணன், ஜெகதீசன், ரவி, வெங்கடாஜலம் உடையார், அருணாச்சலம் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இறைவன் புகழ் பாடுவோம் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெற்றனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.