கடலூரில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: 70 பேர் கைது
கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.
40 சதவீத உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை தெலங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைப் போல் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தனியார்துறை வேலைவாய்ப்பில் 5 சதவீத பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நான்கு மணி நேர வேலை, முழு ஊதியம் ரூ. 256 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடலூரில் இன்று தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அலுவலகம் செல்ல காவல்துறை மறுப்பு தெரிவித்ததால் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் காரணமாக சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.