கார் ஓட்டும்போது பெல்ட் அணிதலுக்கான விழிப்புணர்வுப் பேரணி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கார் ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கார் ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக்குதலுக்கான நடைமுறைகள் எனும் காவல்துறையின் திட்டத்தின்படி, கார் ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அருப்புக்கோட்டை காவல்துறை சார்பில் கார்கள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. நகரிலுள்ள நீதிமன்ற வளாகம் முன்பாகத்தொடங்கிய இப்பேரணியை தாலுகா காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் போக்குவரத்துக்காவல் ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்துத்தொடக்கி வைத்தனர்.
சுமார் 40க்கு மேற்பட்ட கார்கள் கலந்து கொண்ட இப்பேரணியானது, புதிய பேருந்து நிலையம், ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர் கோவில், அண்ணாசிலை, அகமுடையர் மகால், உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக திருச்சுழி சாலையில் சென்று காந்தி நகரில் முடிவடைந்தது. அப்போது, பொதுமக்களிடையே கார் ஓட்டும் உரிமையாளர்கள், மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் பாதுகாப்புக் கருதி சீட் பெல்ட் அணிந்து காரை இயக்கவேண்டும், போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வுப் பிரசாரத்தையும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மேற்கொண்டனர்.
உடன் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துக் காவல்துறையினர், நகர் மற்றும் தாலுகா காவல்துறையினர், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், சொந்தமாகக் கார் வைத்திருப்போர் மற்றும் ஓட்டுநர்கள் நேரில் கலந்து கொண்டனர்.