அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் தொடக்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, அதிமுகவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது.
முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியும், துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கி வைத்தனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகின்றன. அதிமுகவில் இன்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.
விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கிய நிலையில், சட்டமன்ற தேர்தலில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் விருப்ப மனு அளிக்கப்பட்டது. அதுபோல, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விருப்ப மனு அளித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் விருப்ப மனு வாங்கினர்.
இன்று முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று கட்சித் தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.